கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ’நம்ம மெட்ரோ’ என்ற பெயரில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் இருக்கிறது. நகரின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் ஆட்டோ, கேப், பேருந்து போன்ற வசதிகள் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் புதிய வசதியை அக்னிபு டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதாவது மெட்ரோ மித்ரா என்ற மொபைல் அப்ளிகேஷனை தயாரித்து பயணிகளுக்கு வழங்கவுள்ளனர். இதற்கான சோதனை ஓட்டம் தற்போது சென்று கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் பீட்டா வெர்ஷன் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதை டவுன்லோடு செய்ய தேவையில்லை. இந்த சேவையை பயன்படுத்த கட்டணம் ஏதுமில்லை.
மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கி தரைத்தளத்திற்கு பயணிகள் வந்ததும், அங்கே மெட்ரோ மித்ரா க்யூ.ஆர் கோடு வைக்கப்பட்டிருக்கும். அதை தங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். உடனே அது அருகிலுள்ள முக்கியமான பகுதிகளை காண்பிக்கும் லிங்கிற்கு அழைத்து செல்லும். அதில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை தேர்வு செய்துவிட்டால் போதும். OTP ஒன்று மொபைல் போனிற்கு வரும்.உடனே உங்களின் பயணம் புக்காகி விட்டது என்று அர்த்தம்.
இந்த தகவல் அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநரின் ஸ்மார்ட்போனிற்கு சென்றுவிடும். அவர்கள் உங்களின் இடத்திற்கு அருகில் வந்ததும், OTPஐ பகிர்ந்து கொண்டால் போதும். உங்களின் பயணம் தொடங்கிவிடும். கட்டணம் என்பது மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அளவில் தான் வசூலிக்கப்படும். ஆட்டோ மீட்டர் மூலம் ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும்.
இதுதவிர மெட்ரொ மித்ரா சேவையை பயன்படுத்துவதற்காக கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஏகப்பட்ட மொபைல் ஆப்களை டவுன்லோடு செய்து சிரமத்தில் தவித்து வரும் மக்களுக்கு மெட்ரோ மித்ரா சேவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த வசதியை உருவாக்கி வரும் அக்னிபு டெக்னாலஜிஸ் நிறுவனமானது பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்தகட்டமாக பெங்களூரு மெட்ரோவின் வாட்ஸ்-அப் சாட்பாட் வசதி உடன் மெட்ரோ மித்ராவை இணைக்க திட்டமிட்டுள்ளனர். மேற்சொன்ன சாட்பாட் என்பது மெட்ரோ ரயில் டிக்கெட் புக் செய்வது, ரயில் நிலையங்களை தெரிந்து கொள்வது போன்ற பல்வேறு வசதிகளை அளிக்கிறது. இதனுடன் மெட்ரோ மித்ராவை இணைக்கும் போது பயணிகளுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள்
கருத்துரையிடுக